Thursday 8 December 2011

இருமுடி இறக்கிய ஐயப்ப பக்தர்கள்!

திருச்சி : முல்லை பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக கேரளாவில் பதற்றம் நீடிப்பதால், சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தர்கள், தமிழக கோயில்களிலேயே இருமுடி இறக்கி வழிப்பட்டு வருகின்றனர்.  முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கேரளாவில் அரசியல் கட்சியினர், நடிகர்கள் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் தமிழர்கள் தாக்கப்பட்டு அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டன. கம்பம், குமுளி வழியாக சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களையும் தாக்கி விரட்டி அடித்தனர். 

இதில் ஆத்திரம் அடைந்த தமிழக மக்கள் கேரளாவை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்னையால் கடந்த 3 நாட்களாக கேரளாவுக்கு வாகனங்கள் இயக்கப்படவில்லை. சபரிமலை செல்ல வந்த பக்தர்களின் வாகனங்களை தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவதிப்பட்டனர். கம்பம் அருகே சுருளி அருவியில் குளித்து, அங்குள்ள வேலப்பர் கோயிலில் மாலையை கழற்றிவிட்டு சொந்த ஊர்களுக்கு நேற்று திரும்பினர். பலர் பழநி கோயிலுக்கு சென்று மாலையை கழற்றிவிட்டு ஊர் திரும்பினர். கம்பம் பள்ளத்தாக்கு ராயப்பன்பட்டியில் சண்முகா நதி அணை அருகே உள்ள ஐயப்பன் கோயிலில் இன்றும் ஏராளமான பக்தர்கள் இருமுடி இறக்கி மாலையை கழற்றி விரதத்தை முடித்தனர். இதேபோல் புதுச்சேரி, கடலூரில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள், சபரி செல்ல முடியாமல் திரும்பி செல்லும் வழியில் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஐயப்ப கோயிலில் இருமுடி இறக்கி நெய் அபிஷேகம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

இந்நிலையில், கோவை கிராஸ்கட் ரோட்டில் தமிழ்தேச பொதுவுடமை கட்சியினர் நேற்று மதியம் கேரள நகைக் கடைகளுக்குள் புகுந்து நாற்காலிகளை தூக்கி வீசினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதுதொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ள கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் சாலை மறியல் நடந்தது. இதில் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், மக்கள் சிவில் உரிமை கழக நிர்வாகி பொன் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுசி கலையரசன், தமிழ்நாடு மாநில மாணவர் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.