Wednesday 5 October 2011

தற்கொலையை தொலைபேசியில் படம் பிடித்த பெண்

மும்பை, எம்.ஐ.டி.சி. ஏரியாவில் கோல்டன் அபார்ட்மென்ட்டில் உள்ள முதல் மாடியில் வசித்தவர் சாம்தர்ஷி சிங். இவரது மனைவி நிதி சிங் (24). சாம்தர்ஷியும், நிதியும் காதலித்து, கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த அபார்ட்மென்ட்டில் குடியேறினர்.

இந்நிலையி்ல், சாம்தர்ஷி சிங் நேற்றுமுன்தினம் வழக்கம் போல காலையில் வேலைக்கு புறப்பட்டார். அவரை தடுத்து நிறுத்திய நிதிசிங் சிறிதுநேரம் அவரிடம் பேசினார். அதன்பின், சாம்தர்ஷி மீண்டும் வேலை செல்ல புறப்பட்டார். அப்போது மீண்டும் அவரை, நிதிசிங் மீண்டும் தடுத்துள்ளார்.

அதை கண்டு கொள்ளாத சாம்தர்ஷி சிங், வேலைக்கு புறப்பட்டு சென்றார். அதன்பின் சிறிது நேரத்திற்கு பின் அவரது மொபைல்போனுக்கு, ஸாரி என்ற எஸ்.எம்.எஸ். நிதிசிங்கின் மொபைல்போனில் இருந்து வந்துள்ளது. இதையும் சாம்தர்ஷி சிங் கண்டுகொள்ளவில்லை.

மதியம் நிதி சிங்கின் தந்தை, அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. மாலை மொபைல் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

இந்நிலையில் இரவு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்த சாம்தர்ஷி சிங், வீ்ட்டு கதவை பலமுறை தட்டியும் திறக்கவில்லை. இதுகுறித்து சாம்தர்ஷி சிங், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது, நிதி சிங் அறையின் பேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். நிதி சிங்கின் உடலை கைப்பற்றிய போலீசார், அதன் அருகே இருந்த மொபைல் போன் மற்றும் நிதி சிங் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

போலீசாரால் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் தான் தற்கொலை செய்து கொள்வதற்காக, கணவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த பிறவியில் 2 பேரின் குடும்பத்திற்கும் பொதுவான ஒருவராக பிறக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

உடலை கைப்பற்றிய போலீசார் நடத்திய சோதனையில் காலை 10 மணியளவில் நிதி சிங் தற்கொலை செய்திருக்கலாம் என கூறினர். மேலும் அவரது செல்போனில் நிதி சிங் தற்கொலை செய்யும் காட்சியும் பதிவாகியிருந்தது.

சுமார் 1.33 மணிநேரம் ஓடக் கூடிய அந்த வீடியோ காட்சியில், முதலில் கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் தாங்க முடியாத மனவேதனையால் இந்த முடிவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது, நிதி சிங் மற்றும் சாம்தர்ஷி சிங் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 2 பேரும், கடந்த 4 மாதங்களுக்கு முன், இந்த அபார்ட்மெண்ட்டிற்கு குடிவந்தனர். தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.